Topics

24 Jun 2011

கண்டுபிடிப்புகள்... கண்டறிதல்கள்..

நாம் வாழும் இப்பூமி மற்றும் அண்டவெளி  யாவும் 
தன்னில் தானாக உண்டானதோ அல்லது படைக்கப்பட்டதோ ( இதற்கான விடையே இன்னும் அறியப்படவில்லை....
அது குறித்து பேசக் கிளம்பினால் வாக்குவாதம் நீண்டுகொண்டே செல்லும். எனவே இதை உங்களிடமே விட்டு விடுகிறேன்..
அனைவரும் ஏற்கக்கூடிய விடை இருப்பின் கூறவும்.)
எதுவாக இருப்பினும்,
அவ்வாறு இவ்வுலகம் உருவானபோது எவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருந்ததோ
இன்றுவரை அதைமட்டுமே கொண்டுள்ளது என்றே நான் நம்புகிறேன்..
இவ்வுலகில் எவரும் எதையும் புதிதாக உருவாக்கிடவும் இல்லை, எதையும் இல்லாமல் செய்திடவும் இல்லை..
அவ்வாறு உருவாக்கவும், இல்லாமல் செய்திடவும் நம்மால் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை..
நாம் இங்கிருப்பவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு 
அதை உருமாற்றத்திற்கு உட்படுத்துகிறோமே தவிர
வேறெதையும் செய்வதில்லை..
ஏற்கனவே இங்கிருந்துகொண்டிருந்த ஒன்று  பெரும்பான்மையானவர்களால்
உணரப்படாமல் இருந்தபோது, நம்மின் நடுவிலிருந்த  ஒருவரால் உணரப்பட்டதை  
கண்டு பிடிக்கப்பட்டது  என கூறுவதைவிட " கண்டுணரப்பட்டது"
என கூறுவதே பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்..
அதாவது Invented by என்று கூறுவதை விட  Discovered by என்று சொல்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்..

இக்கருத்தும் நான் உணர்ந்ததால் (சில பல வருடங்களாக) தோன்றியதேயல்லாமல் புதியதாக ஒன்றும் கூறிடவில்லை...
இவ்வுலகம் எவ்வாறு உருவாகி இருக்கும், இதன் தொடக்கம் எது? முடிவு எது?
என மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து,மண்டை காய்ந்து குழம்பியபோது தோன்றியதுதான் நான் மேலே சொன்னது..
இன்னும் நிறைய சொல்ல நினைத்தும் சொல்லாமலே முடித்துகொள்கிறேன்..
இல்லையென்றால்  நான் ஏதோ "ஒரு மாதிரி " என மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள்...







22 Jun 2011

நினைவுகள்...


சில நேரங்களில்
நம் வாழ்வில் வந்து சென்ற மனிதர்களை நினைத்து கொண்டால் அவர்கள்
நம் மனக்கண்ணில் வந்து விடுகிறார்கள் ..
அவர்கள் பூமியின் ஏதாவதொரு மூலையில் இருந்தாலும் 
உருவமற்ற உருவமாய்
பேசி,சிரித்து நாம் என்னவெல்லாம் கற்பனையில் உணர்கிறோமோ
அவ்வாறெல்லாம் நம்முடன் இருக்கிறார்கள்.

மகிழ்ந்திருந்த தருணங்கள் நினைவில் மீண்டும் மகிழ்வைத் தருகிறது,
எவர்களுடன் மகிழ்ந்திருந்தோமோ அவர்கள் நம்முடன் இல்லாமலேயே....
ஒரு முறையே நடந்திருந்த நிகழ்வுகள் நினைவில் பல முறை நெகிழ்வைத் தருகிறது,
அந்நிகழ்வுகள் மீண்டும் நடக்காமலேயே.
நம்மால் அவர்களை உணர முடிகிறது, நினைவுகளால் தொடர முடிகிறது.
அச்சமயங்களில் நாம் மனதளவில் மகிழ்ச்சியாகவே உணர்கிறோம்.
நினைவுகளால் மலர்கிறோம்..

ஒருவேளை...
அதே நபர்கள் இறந்திருப்பின் அவர்களை  நினைக்கும் போதெல்லாம் வருந்துகிறோம்.
மகிழ்ந்திருந்த தருணங்கள் நினைவில் வருத்தத்தைத் தருகிறது
எவர்களுடன் மகிழ்ந்திருந்தோமோ அவர்கள் நம்முடன் இல்லாமலேயே..
ஒரு முறையே நடந்திருந்த நிகழ்வுகள் பல முறை சோகத்தில் ஆழ்த்துகிறது..
அந்நிகழ்வுகள் மீண்டும் நடக்காமலேயே.

இரு வேறு நிலைகளிலும் நாம் யாரை நினைத்தோமோ அவர்கள்  நம்முடன்
இருந்து நம்மை மகிழ்விக்கவும் இல்லை, நம்மை விட்டு சென்று துயரப்படுத்தவும் இல்லை.
உண்மையில் நம்மை மகிழ்வித்ததும், துயரப்படச் செய்ததும் அவர்களின் நினைவுகள் மட்டுமே..
நாமாகவே அவருடைய நினைவுகளுடன் மகிழ்வுடனும், வருத்ததுடனும் இருந்திருக்கிறோம்.
எனில் ஒருவர் இருந்தாலும்,
இறந்தாலும் அவரின் நினைவுகளைக்  கொண்டு நாம் மகிழ்வுடன் வாழ முடியுமா?
நம்மை மகிழச் செய்வதும், துயரப் படச் செய்வதும்
ஒருவரின்  நினைவுகள்தான் என்றால் இறந்தது யார்?
ஒருவர் நம்முடன் இல்லை,
ஆனால் இவ்வுலகில் இருக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே
ஏன் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது? 
இருந்த போதும், இறந்த பின்பும் நம்முடன் இல்லாதிருந்த ஒருவரின்
நினைவுகள் இருவேறு விதமாக செயல்பட எது காரணம்?
ஒருவரின் இருப்பும், இறப்பும் நம்மிடத்தில்
எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும்
அவரின் நினைவுகள் ஏன் இவ்வித உணர்வைத் தருகிறது?
இவ்வாறு சில கேள்விகளுடன் எனது நினைவுகள் தொடர்கிறது..